தாய் கண் முன்னே குத்திக் கொலை செய்த கொடூரம்

by Admin / 14-02-2022 02:03:50pm
தாய் கண் முன்னே குத்திக் கொலை செய்த கொடூரம்

அசாமின் கச்சார் மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை அன்று மூன்று வயதான குழந்தையை  கத்தியால் குத்திக் கொன்றதாக மனநலம் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய முதியவரை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஆனது கச்சார் மாவட்டத்தில் உள்ள தோலாய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஷியாமசரன்பூர் கிராமத்தில் நேற்று மாலை நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. 

குழந்தையின் பெற்றோர் சல்மான் உதின் லஸ்கர் மற்றும் ஹஃப்சனா பேகம் லஸ்கர்  தங்கள் வீட்டில் இருந்தபோது ஒருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து குழந்தையை ஹஃப்சனா பேகத்திடம் இருந்து பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த அந்த நபர் தான் வைத்திருந்த கூர்மையான கத்தியை கொண்டு அந்த 3 வயது குழந்தையை கொடூரமாக குத்திக்கொலை செய்துள்ளார். 

இந்த சம்பவம் குழந்தையின் தாய் கண்முன்னே அரங்கேறியுள்ளது.தம்பதியினரின் கதறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து குழந்தையை கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற நபரை கடுமையாக தாக்கியுள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், 3 வயது குழந்தையை கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற நபரை கைது செய்துள்ளனர். 

தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கொலை செய்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இதனிடையே, குற்றம் சாட்டப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொல்லப்பட்ட குழந்தையின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று காவல் அதிகாரிகள் கூறிய எதனையும் நான் மறுக்கவில்லை ஆனால் என் கண்முன்னே என் மகளைக் கொன்றதால் என்னால் அவரை மன்னிக்க முடியாது. 

ஒரு தாயால் மட்டுமே அந்த வலியை உணர முடியும், அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்  என்று அவர் கூறினார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,  அந்த நபர் குழந்தையின் பெற்றோர் கண் முன் இந்த குற்றத்தை செய்துள்ளார். 

கோபமடைந்த அப்பகுதி மக்கள் அந்த நபர் வசிக்கும் குடிசையை எரித்துள்ளனர்.குற்றம் சாட்டப்பட்ட நபர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கச்சார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராமன்தீப் கவுர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கிராமத்தில் ஒரு மூதாட்டியை கொலை செய்ததால்  சிறை தண்டனை பெற்றிருந்தார், 

ஆனால் அவரது மன நிலையைக் கருத்தில் கொண்டு தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு  விடுதலை செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo