தந்தையை கூலிப்படை வைத்து கொன்ற மகன்

by Staff / 22-03-2022 01:56:51pm
 தந்தையை கூலிப்படை வைத்து கொன்ற மகன்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி-65. இவர்  தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். 

லோகேஸ்வரி என்ற மகளும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். உமாபதியின் மனைவி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மகள் லோகேஸ்வரிக்கு இரண்டு குழந்தைகளும், சரவணனுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

மேலும் லோகேஸ்வரியின் முதல் கணவர் இறந்துவிட்டார். இதனையடுத்து லோகேஸ்வரி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். உமாபதிக்கு சொந்தமாக கன்னிவாக்கத்தில் ஒரு வீடும், காயரம்பேடு பகுதியில் ஒரு வீடும் உள்ளன. 

அதில் ஒரு வீட்டை சரவணனுக்கும், மற்றொரு வீட்டை மகள் வழி பேரனான பரமேஸ்வரனுக்கும் உமாபதி எழுதி வைத்துவிட்டார். இதில் இரண்டு வீட்டையும் தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி சரவணன் கடந்த ஒரு ஆண்டாக தந்தையிடம் சண்டை போட்டு வந்துள்ளார். ஆனால் அதற்கு உமாபதி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் வழக்கம் போல் தனது பணிக்காக சென்ற போது அவரது இரு சக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். 

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த உமாபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

Tags :

Share via