இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியுதவி

by Editor / 05-05-2022 04:25:09pm
இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியுதவி

பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் “கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மற்றும் அத்தியாவசிய தேவைப்பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் பொருள் உதவி அளிப்பது என முதல்வர் அறிவித்தார். தாரளமாக உதவிடுமாறு பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து இருந்தார். 
 
அவரது வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூ.13.15 லட்சம் வழங்கப்பட்டது. அதற்காக, இன்று (05.05.2022) தமிழக அரசு தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மதிமுக செயலாளர் துரை வைகோ சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் திருமலைக்குமார், அரியலூர் சின்னப்பா, மதுரை பூமிநாதன் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூபாய் 5 லட்சம்; நாடாளுமன்ற உறுப்பினரும், மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளருமான வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தங்களது ஒரு மாத ஊதியம் தலா 2 லட்சம்; 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ரூபாய் 1,05,000; ஒருவர் ஒரு லட்சம் என மொத்தமாக 13 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் வரைவோலையாக முதல்வரிடம் வழங்கப்பட்டது" என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories