ஒரே நிமிடத்தில் கொரோனா முடிவை தரும்  சுவாச சோதனை முறை

by Editor / 24-07-2021 08:04:07pm
ஒரே நிமிடத்தில் கொரோனா முடிவை தரும்  சுவாச சோதனை முறை



கொரோனாவை விரைவாக கண்டறியும் சுவாச சோதனை முறைக்கு சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான
பிரிதோனிக்ஸ்  ஆகியவை இணைந்து கொரோனாவை கண்டறியும் சுவாச சோதனை கருவியை உருவாக்கியுள்ளன.

இது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதைக் கண்டறிய போலீசார் பயன்படுத்தும் கருவியை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் தனது காற்றை வெளிப்படுத்தியதும் அதை சுவாச சோதனை கருவி சேகரித்துக் கொள்ளும்.


பின்னர் உள்ளிருக்கும் மென்பொருள் ஆனது சுவாசத்தில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று கண்டுபிடித்து சொல்லிவிடும். அதாவது வெறும் ஒரு நிமிடத்தில் முடிவுகளை தெரிவித்துவிடுகிறது. அதன்பின்னர் RT-PCR பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படும். இந்த கருவியை பயன்படுத்த சிங்கப்பூர் அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
முதல்கட்டமாக சிங்கப்பூர் நாட்டின் எல்லைப் பகுதியான Tuas சோதனைச் சாவடியில் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது பிற நாடுகளில் இருந்து வருவோருக்கு ஆண்டிஜென் ரேபிட் பரிசோதனையை சிங்கப்பூர் அரசு செய்து வருகிறது. இதனுடன் சேர்த்து சுவாச சோதனை முறையும் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூரின் சுற்றுலா துறை பெரிதும் முடங்கியுள்ளது.


இதனை புதுப்பிப்பது பற்றி அந்நாட்டு அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் அதிக நோய்த்தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் சூழலிலும் தனது கதவுகளை திறந்து சுற்றுலாவிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில் புதிதாக ஜீரோ கொரோனா பாதிப்புகளை பதிவு செய்து வரும் சிங்கப்பூர் ஏன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக் கூடாது என்று அந்நாட்டு அரசு யோசனை செய்து வருகிறது. அதேசமயம் ஒட்டுமொத்தமாக கதவுகளை திறந்து மீண்டும் வைரஸ் தொற்று உச்சத்திற்கு சென்றுவிடக் கூடாது என்ற கவனமாக இருக்க விரும்புகிறது. எனவே படிப்படியாக வெளிநாட்டு பயணிகளை அனுமதிக்க சுவாச சோதனைக் கருவி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via