வீட்டிலிருந்து வெளியே வர  தடுப்பூசி ஆதாரம் தேவை; சவுதி அரேபியா அரசு அதிரடி உத்தரவு

by Editor / 24-07-2021 08:04:42pm
 வீட்டிலிருந்து வெளியே வர  தடுப்பூசி ஆதாரம் தேவை; சவுதி அரேபியா அரசு அதிரடி உத்தரவு



சவுதி அரேபியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனகா ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மொத்தம் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சவுதியில் 11.5 மில்லியன் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வந்த சூழலில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சவுதியில் இருந்து வெளியே செல்லலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


இந்த சூழலில்  புதிய பாதிப்புகள் 1,200ஐ தாண்டியுள்ளது. இது கடந்த சில மாதங்களில் இல்லாத அளவு அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள், பள்ளிகளுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவோர் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆவணத்தை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.


அதாவது வீட்டை விட்டு வெளியே வந்தாலே தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆதாரம் அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது. சவுதி அரேபியாவில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய ஏற்பாட்டை அந்நாட்டு அரசு செய்துள்ளது.முன்னதாக துபாய், பஹ்ரைன், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நாடுகள் இதேபோன்ற நடவடிக்கையை கையிலெடுத்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக சவுதி பிரஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு நிகழ்வுகள்,தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். இல்லையெனில் அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. இதனை அதிகாரிகள் எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்ற விவரம் தெரிய வரவில்லை.

 

Tags :

Share via