டெல்லி மருத்துவமனை ஐசியுவில் பயங்கர தீ விபத்து- நோயாளி ஒருவர் பலி
டெல்லி ரோகினி பகுதியில் பிரம்ம சக்தி மருத்துவமனை உள்ளது. இதன் மூன்றாவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இன்று காலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு சுமார் 9 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை அவசர அவசரமாக மருத்துவ நிர்வாகம் அப்புறப்படுத்தினர். இருப்பினும் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த நோயாளி ஒருவர் பலியானார். இதுகுறித்து டெல்லி தீயணைப்பு சேவை இயக்குனர் அதுல் கர்க் கூறியதாவது:- மருத்துவமனையின் ஐசியுவில் தீ விபத்து ஏற்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த ஒரு நோயாளியைத் தவிர அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags :