பிரான்ஸ் - ஸ்பெயின் நாடுகளில் வரலாறு காணாத அளவில் பரவி வரும் காட்டுத்தீ
பிரான்ஸ் - ஸ்பெயின் நாடுகளில் வரலாறு காணாத அளவில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக 3,40,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை மற்றும் வறண்ட வானிலை காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பிரான்சில் உள்ள ஜிரோண்டே மற்றும் லாண்டெஸ் வட்டாரங்களில் மட்டும் 2,20,000-க்கும் மேற்பட்ட மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கேப் ஃபெரெட்பகுதியிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகுகள் மற்றும் கார்கள் மூலம் வெளியேறினர்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மற்றும் ஆவிலாஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் அல்லது தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்
.
காட்டுத்தீயின் தீவிரம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால் ஸ்பெயின் அரசு நாட்டில் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தீயை அணைக்கும் பணிகளில் இராணுவத்தை ஈடுபடுத்தியுள்ளார். இராணுவத்தின் சரக்கு விமானம் முதன்முறையாக தீயணைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது
நிலைமை மோசமடைந்ததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஜெர்மனி மற்றும் குரோஷியா போன்ற நாடுகள் தங்களின் சிறப்பு தீயணைப்பு விமானங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி உதவி வருகின்றன. இந்த பெரும் தீ விபத்து மற்றும் அவசரநிலை காரணமாக, பிரான்சின் புகழ்பெற்ற 'டூர் டி பிரான்ஸ்'மிதிவண்டிப் போட்டியின் இறுதிச் சுற்றுப் பாதை சுருக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினர் தீயணைப்புப் பணிக்கு மாற்றி விடப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய கண்டம் உலகளாவிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிவேகமாக வெப்பமடைந்து வருவதே இதற்கு முக்கியக் காரணம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இப்பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக பதிவாகும் கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்று தீயை அசுர வேகத்தில் பரவச் செய்கிறது.
கடந்த குளிர்காலத்தில் பெய்த அதிக மழையால் காடுகளில் தாவரங்கள் அதிக அளவில் வளர்ந்தன, தற்போதைய கோடை வெப்பத்தால் அவை அனைத்தும் வறண்டு போய் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருளாக மாறிவிட்டன
.பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் அமைதிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மக்கள் வெளியேற்ற நடவடிக்கை இதுவென அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மாட்ரிட் மற்றும் போர்டோ போன்ற முக்கிய நகரங்களை நோக்கித் தீ பரவாமல் தடுக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
Tags :












.jpg)
.jpg)

.jpg)

