ஆடி கார் வாங்கி கொடுக்காததால் கிரிக்கெட் மட்டையால் அடித்து மனைவி கொலை
ஆடி கார் வாங்கிக் கொடுக்காததால் மூன்றாம் ஆண்டு திருமண நாள் அன்று மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார் கணவர். பெண்ணின் பெற்றோர் போலீசில் கதறி அழுகின்றனர். சேலம் மாவட்டத்தில் ஜங்ஷன் ரெட்டி பட்டியைச் சேர்ந்தவர் கீர்த்தி ராஜ்(31). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவரது மனைவி தனஸ்ரீ (26). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்குப் பின்னர் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார். நேற்று கணவர் மனைவியை சமாதானம் செய்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் நேற்று இரவே தனஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பெற்றோர் நேரில் வந்து பார்த்தபோது தனஸ்ரீ தலைப்பகுதி, உடல் முழுவதும் காயங்கள் இருந்திருக்கின்றன. வீடு முழுவதும் ரத்தக்கரை இருந்திருக்கின்றன. அங்கிருந்த கிரிக்கெட் மட்டையில் ரத்தம் படிந்து இருந்திருக்கிறது. அப்போதுதான் கிரிக்கெட் மட்டையால் தங்களது மகளை அடித்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது .
இதையடுத்து சூரமங்கலம் காவல்நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். திருமணத்திற்கு சில மாதங்களுக்குப் பின்னரே ஆடி கார் வேண்டும் என்று கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். அப்புறம் மேலும் வரதட்சணை போதவில்லை என்று சொல்லி கொடுமைப்படுத்தி வந்தனர் . திருமணத்திற்குப் பின்னர் மூன்று மாதங்கள் மட்டுமே எங்கள் மகள் மகிழ்ச்சியாக இருந்தாள். அதன் பின்னர் சித்திரவதை தான் அனுபவித்து வந்தாள். இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று தான் எங்களுடன் வந்து வாழ்ந்தார். சமாதானம் பேசுவது மாதிரி அழைத்துச் சென்று கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்து விட்டார்கள். அதுவும் மூன்றாம் ஆண்டு திருமண நாளன்று அடித்துக் கொலைசெய்திருக்கிறார்கள் . அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி தண்டனை தரவேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்து உள்ளனர்.
Tags :