கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலையில் மர்மம்..! நடந்தது என்ன.? தாய் கண்ணீர் புகார்

by Editor / 17-07-2022 02:41:12pm
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலையில் மர்மம்..! நடந்தது என்ன.? தாய் கண்ணீர் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம்  கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  17 வயது சிறுமி, அந்த பள்ளியில் உள்ள  விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி கடந்த 13-ம் தேதி இரவு பள்ளியில் உள்ள விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளியின் தாளாளர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். முதலில் மாடியில் இருந்து கிழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் மாணவியின் தாயாரை  தொடர்பு கொண்டு மாணவி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து மாணவியின் பெற்றார் உடனடியாக பள்ளிக்கு விரைந்துள்ளனர். இந்தநிலையில் மாணவியின் உடலை  பள்ளி நிர்வாகமே உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து இறந்த மாணவியின் உடலை பார்க்க மாணவியின் பெற்றோர் மருத்துவமனை சென்றுள்ளனர். அப்போது மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாக மாணவியின் தாய் உறவினர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த மக்கள், தனியார் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாணவியின் தாய் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரில் தனது மகளின் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், அவர் உடலில் காயங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து மாணவியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து மாணவியின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் தனது மகள் உயிரிழப்பு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்வி பதில் அளித்த மாணவியின் தாயார், தனது மகள் இறப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் தகவலை தெரிவிப்பதாக கூறினார். பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சியை ஏன் தெளிவாக காண்பிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.தனது மகள் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து முழுமையாக தங்களிடம் தெரிவிக்கவில்லையென குற்றம்சாட்டினார்.

 

Tags :

Share via