இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

by Editor / 21-08-2022 04:03:10pm
இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

தூத்துக்குடி பிரைன்ட் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சரவணகுமார் (வயது 28). இவர் பெயிண்டராக உள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் அவ்வபோது, புதிய பேருந்து நிலையம் பகுதிகளுக்கு சென்று தனது நண்பர்களை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல், புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்துள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரவணகுமாரை வெட்ட முயன்றனர். ஆனால் அவர்களுக்கு பயந்து சரவணகுமார் ஓட்டம் பிடித்துள்ளார். பின்னர் அவரை ஓட ஓட வெட்டி அந்த கும்பல் படுகொலை செய்துள்ளது.

இதனால் ரத்த வெள்ளத்தில் சரவணகுமார் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்வம் குறித்து தகவலறிந்ததும், போலீசார் விரைந்து வந்தனர். மேலும் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து, சரவணகுமாரின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

சரவணகுமாருக்கும், தாளமுத்துநகரை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகமடைந்தனர். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில், மாரி மற்றும் முத்து ஈஸ்வரன் என்ற 2 பேரை கைது செய்துள்ளனர்.

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சரவணக்குமாரின் நண்பரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், முதலில் சரவணகுமாரை கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள மீதம் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினால் கொலைக்கான காரணம் முழுமையாக தெரியும் என காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
 

 

Tags :

Share via