சென்னை சைதாப்பேட்டையில் 4 டன் கலப்பட சமையல் எண்ணை பறிமுதல்.

by Editor / 24-08-2022 08:09:50pm
சென்னை சைதாப்பேட்டையில் 4 டன் கலப்பட சமையல் எண்ணை பறிமுதல்.

சைதாப்பேட்டை எண்ணெய் கடை ஒன்றில் புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள எண்ணெய் கடையில் சமையல் எண்ணெயில் கலப்படம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

அதன் அடிப்படையில், வாட்ஸ் ஆப்பில் வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வில் இறங்கினர். இந்தக் கடையில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரமாக எண்ணெய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு நிலத்தடியில் சேமிப்பு கிடங்கு போல் அமைக்கப்பட்டு அதில் தரமற்ற முறையில் எண்ணெய் பாதுகாக்கப்பட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்தது.

இதில் சென்னை மண்டல உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், தரமற்ற, பாதுகாப்பு இல்லாத முறையில் நிலத்திற்கு அடியில் தொட்டி  அமைத்து எண்ணெய் சேகரித்து வைக்கப்பட்டதும்,

இதற்காக முறையான விதிமுறைகள் எதுவும் பின்பற்றாததும் தெரிய வந்தது. மேலும் இது பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்னெய் என்றும் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. அதனையடுத்து 4.3 டன் எண்ணெய்கலப்படம் என கண்டறியப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதுகுறித்து அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு கடைக்கு சீல் வைத்தனர்.உங்கள் பகுதியில் உள்ள தரமற்ற உணவு விற்பனை குறித்து புகார் அளிக்க 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்பலாம்

 

Tags :

Share via