பூ வியாபாரி வெட்டிக்கொலை

by Staff / 05-10-2022 01:29:06pm
 பூ வியாபாரி வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள செட்டிக்குறிச்சியை சேர்ந்தவர் அழகுதுரை (வயது35). பூ வியாபாரி. இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.அழகுதுரை நேற்று தனது உறவினருடன் கயத்தாறு மஞ்சநம்பிகிணற்று பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு மதுக்குடிக்க சென்றனர். அப்போது அழகுதுரைக்கும் அவரது உறவினருக்கு இடையே மதுக்குடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

பார் உரிமையாளரான கரிசல்குளத்தை சேர்ந்த மாடசாமி என்பவர் தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதற்கிடையே நேற்று இரவு மாடசாமி, அவரது மகன் பட்டுராஜா மற்றும் உறவினர்கள் 5 பேர் சேர்ந்து அழகுதுரை வீட்டிற்கு சென்று எப்படி எங்கள் பாரில் வந்து தகராறு செய்யலாம் என கேட்டனர்.

இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த 7 பேரும் சேர்ந்து அழகுதுரையை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

கொலை குறித்து தகவலறிந்ததும் கோவில்பட்டி டி. எஸ். பி. வெங்கடேஷ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமி, அவரது மகன் பட்டுராஜா உள்ளிட்ட 7 பேரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via