போராட்டத்தில் இளம்பெண். பொதுமக்கள் எதிர்ப்பு

by Editor / 27-06-2021 04:08:21pm
போராட்டத்தில் இளம்பெண். பொதுமக்கள் எதிர்ப்பு

தென்காசி மாவட்டத்திலுள்ள தாட்கோ பகுதியில் பிரான்சிஸ் அந்தோணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஜூலி மற்றும் அபிதா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரான்சிஸ் அந்தோணி ரேஷன் அரிசி கடத்தியதாக கூறி காவல்துறையினர் அவரின் மீது வழக்குப்பதிந்து பிரான்சிஸ் அந்தோணியை தாக்கி உள்ளனர். இதனால் காயம் அடைந்த பிரான்சிஸ் அந்தோணியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை அறிந்த அவரின் இரண்டாவது மகளான அபிதா என்பவர் தனது தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி சென்றும், அந்தக் காவல் துறையினரின் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மருத்துவமனையில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறிச் சென்று விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் காவல்துறையினர் பிரான்சிஸ் அந்தோணியை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் ஏட்டு மாஜித் ஆகியோரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிறகு போராட்டத்தை கைவிட்டு வீடு சென்றார். இந்நிலையில் அபிதா மற்றும் ஜூலியா ஆகிய இருவரும் இணைந்து தங்களது வீட்டின் கூரை மீது ஏறி உட்கார்ந்ததும், ஜூலி தரையின் கீழே உட்கார்ந்தும், தங்களது தந்தையை தாக்கிய காவல்துறையினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட அக்கா-தங்கை இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தைக் கைவிட்டு சென்றனர்.

அதன் பிறகு காவல் துறையினர் தங்களை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்த குற்றத்திற்காகவும்,2 அபிதாவின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் பொதுமக்கள் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் ஏட்டு மஜித் தங்களது பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது 33 லட்சம் பணத்தையும், புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை கடத்தி சென்றவர்களை கைது செய்ததோடு அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்தக் காவல் துறையினர் தங்களது பகுதியில் பெறுப்பு ஏற்றதால் குற்றங்கள் அதிகம் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் ஏட்டு மஜீத் ஆகிய இரு காவல்துறையினரையும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றி வந்த காவல்நிலையத்தில் மீண்டும் பணிபுரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்த பிரான்சிஸ் அந்தோணி ரேஷன் அரிசியை எடுத்துச் சென்றதால் காவல்துறையினர் அவரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனால் பிரான்சிஸ் அந்தோணியின் இரண்டாவது மகளான அபிதா காரணமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் ஊரின் பெயரை கெடுக்கும் வகையில் இதனை செய்து இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories