ஆட்டோ மோதிய விபத்தில் மாணவர் பலி.
பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி, வீராச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் திருவரசு (19) பிளஸ் 2 முடித்துவிட்டு மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். பெருந்துறையை அடுத்துள்ள பெரிய வேட்டுவபாளையம் பகுதியில் வசித்து வரும் தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று விட்டு, தனது பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். இவர் சென்னிமலை ரோடு, வேட்டுவபாளையம் பிரிவு அருகே வந்த போது இவருக்கு பின்னால் வந்த மினிடோர் ஆட்டோ ஒன்று இவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திருவரசு பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, விபத்துக்கு காரணமான ஆட்டோ டிரைவர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த அசோக் (30) என்பவரை கைது செய்தனர்.
Tags :