வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை

by Staff / 11-03-2023 03:34:30pm
வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் ஈரோடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் சொல்லிவிட்டு போனின் இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் உஷாரான போலீசார் உடனடியாக இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்திற்கு சோதனையிட சென்றனர். மேலும் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோப்பநாய் கயல் வரவழைக்கப்பட்டது. ரெயில் நிலையம் நுழைவாயில் பகுதி முதல் ஒவ்வொரு பகுதியாக சல்லடை போட்டு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். மேலும் பயணிகள் உடமைகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடைமேடையிலும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள கடைகள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், குப்பை கூடைகள், ரெயில்வே பணிமனை பகுதி என ஒவ்வொரு பகுதியாக தீவிரமாக சோதனை செய்தனர். அந்த சமயம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்களையும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் திடீரென போலீசார் சோதனை செய்ததால் பயணிகள் பதற்றுத்துடன் காணப்பட்டனர்.

 

Tags :

Share via