சென்னை -கன்னியாகுமரி வந்தேபாரத் ரயில் பிரதமருக்கு  ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை.

by Editor / 29-03-2023 10:01:14pm
சென்னை -கன்னியாகுமரி வந்தேபாரத் ரயில் பிரதமருக்கு  ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை.

பாரத பிரதமர்மோடி  ஏப்ரல் மாதம் 8-ம் தேதி சென்னைக்கு வருகை தந்து பல்வேறு ரயில்வே திட்டங்களை திறந்துவைக்க உள்ளார்கள். இதில் முக்கியமாக சென்னை – கோவை வந்தேபாரத் ரயில் சேவை மற்றும் தாம்பரம் - செங்கோட்டை வாரம் மூன்று முறை ரயில் சேவையும் தொடங்கிவைக்க இருக்கின்றார்.

தேசிய தலைநகர் புது டெல்லி செங்கோட்டையில் இருந்து கடந்த 2021-ம் வருடம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வழக்கமான உரையை நிகழ்த்திய மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் கூறியதாவது: ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் நடைபெறும் 75 வாரங்களில் 75 வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என்று அறிவித்தார்கள். இது தவிர கடந்த 2022-ம் வருடம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அவர்கள் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிக்குகளை தொடர்ந்து நாடு முழுவதும் வந்தேபாரத் ரயில்களை இயக்கும் பணிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டாவது வந்தேபாரத் ரயில் சென்னைக்கும்-கோவைக்கும் இடையே இயக்கப்பட இருக்கிறது.

பொதுவாக தெற்கு ரயில்வேக்கு இது போன்ற அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டால் அது சென்னையை மையமாக வைத்து பெங்களூர் அல்லது கோயம்புத்தூர்கோ இயக்கப்படும்.அதை நிரூபிக்கும் வகையில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு ரயில்களையும் சென்னை - மைசூர் மற்றும் சென்னை - கோவைக்கு இயக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்படும் ரயிலை வைத்து முழு தமிழ்நாடும் பயன்படும் விதத்தில் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தெற்கு ரயில்வே இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. தெற்கு ரயில்வே  அதிகாரிகள் இந்த பெட்டியை வைத்து எந்த தடத்தில் இயக்கினால் சிறப்பாக இருக்கும் அதிக வருவாய் கிடைக்கும் எந்த தடத்தில் இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எந்த தடம் அதிக நெருக்கடி நிறைந்ததாக உள்ளது என்று பரிசீலித்து ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். ஆனால் இவ்வாறு ஒன்றுமே செய்யாமல் தெற்கு ரயில்வே அதிகாரிகள் சென்னை – கோவை தடத்தில் இயங்கும் என்றும் பிரதமர் தொடங்கி வைத்தார்கள் என்று அறிவித்துவிட்டார்கள்


சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 740 கி.மீ வழித்தடத்தில் சென்னை - திருநெல்வேலி இடையே முழுவதும் மின்மயமாக்கல் உடன் கூடிய இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திருநெல்வேலி- மேலப்பாளையம் 3.6 கி.மீ மற்றும் ஆரல்வாய்மொழி  -கன்னியாகுமரி 28.6 கி.மீ பாதை  என மொத்தம் 32.2 மட்டும் ஒரு வழி பாதையாக உள்ளது. ஆகவே இந்த தடத்தில் வந்தேபாரத் ரயில் இயக்க போதிய வசதி வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தின் தென்மாவட்டங்கள் என்றால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை , தேனி, திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் ஒரு சில இடங்களை அடக்கிய பகுதிகளை தென் மாவட்டங்கள் என்று பொதுவாகக் கூறலாம். இந்த தென்மாவட்டங்கள் ரயில்வே வளர்ச்சியிலும் ரயில்கள் இயக்கத்தில் மிகவும் பின்தங்கிய உள்ளன.   மாவட்ட வாரியாக 2011 கணக்கெடுப்பின் மக்கள் தொகை

கன்னியாகுமரி-18,70,374
திருநெல்வேலி , தென்காசி இணைந்து - 33,22,644
தூத்துக்குடி-17,50,176
விருதுநகர்- 19,42,288
மதுரை-30,38,252
ராமநாதபுரம்- 13,53,445
சிவகங்கை-13,39,101
தேனி- 12,45,899
திண்டுக்கல்- 21,59,775
புதுக்கோட்டை-16,18,345

தென்மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் பெரிய விமான நிலையங்கள், ரயில்வே திட்டங்கள், சாலை போக்குவரத்து என பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது.  புதிய திட்டங்கள் தான் இல்லை அதிக தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பு  உள்ள சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு புதிய ரயில்கள் தினசரி  இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை கூட ரயில்வே துறை கண்டுகொள்ளவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரு ரயில் கூட தென்மாவட்டங்களுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆகவே மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் இந்த விஷயத்தில் தலையீட்டு வந்தேபாரத் ரயிலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via