கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்: பெண் பலி

by Admin / 04-08-2021 04:07:05pm
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்: பெண் பலி



கல்பாக்கம் அருகே ஆஸ்பத்திரிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் பெண் பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பெருமாள்சேரி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வித்யா (27). மகள் கனிமொழி (7). நேற்று முன்தினம் மாலை வித்யா தனது மகள் கனிமொழிக்கு உடல்நிலை சரியில்லாததால் கல்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கணவரின் தம்பி சஞ்சய் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரைசாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

 அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த கார் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக கல்பாக்கம் அணுசக்திதுறை ஊழியர் குடியிருப்பில் உள்ள அணுசக்திதுறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வித்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கனிமொழி, மற்றும் சஞ்சய் இருவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via