விருதுநகரில் காய்கறி-இறைச்சி கடைகளில் தீ விபத்து

by Admin / 10-08-2021 04:28:18pm
விருதுநகரில் காய்கறி-இறைச்சி கடைகளில் தீ விபத்து

 

விருதுநகரில் இன்று அதிகாலை காய்கறி, இறைச்சி கடைகளில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின் கசிவு காரணம் இல்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விருதுநகர் தேசபந்து திடல் எதிரே பழைய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறி, இறைச்சி, பலசரக்கு உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
 
மார்க்கெட் நுழைவு வாயில் அருகில் விஜயா என்பவரது காய்கறி கடையும், ராஜா என்பவரது கருவாட்டு கடையும் உள்ளன.

நேற்று மாலை வியாபாரம் முடிந்ததும் 2 பேரும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 கடைகளில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனே விருதுநகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரி மணிகண்டன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 கடைகளின் ‌ஷட்டரை உடைத்தனர். அப்போது கடைக்குள் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தீ விபத்துக்கு மின் கசிவு காரணம் இல்லை என தெரிய வந்தது. திட்டமிட்டு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.

 

Tags :

Share via

More stories