காரில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது
பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையம் பிரிவு அருகே சப்&இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
பல்லடம் பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கஞ்சா விற்பனையை தடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையம் பிரிவு அருகே சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரிலோக் நாயக்(வயது 40) என்பதும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 6 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags :