திருப்பூர் அருகே பயங்கரம்-பரிகார பூஜை செய்த வாலிபர் வெட்டிக்கொலை

by Admin / 10-08-2021 03:59:37pm
திருப்பூர் அருகே பயங்கரம்-பரிகார பூஜை செய்த வாலிபர் வெட்டிக்கொலை

வரதராஜனின் மகன் காளமேகப்பெருமாள் மட்டும் வெள்ளக்கோவில் திருவள்ளூவர்நகர் பகுதியில் தங்கியிருந்து பரிகார பூஜைகளை செய்து வந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நடேசன்நகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு காளமேகப்பெருமாள் (வயது 20), தினேஷ், கார்த்திக்கேயன் என்ற மகன்களும், மணி மேகலை என்ற மகளும் உள்ளனர்.

வரதராஜன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பரிகார  பூஜைகள் செய்து வந்தார். தினமும் வெள்ளக்கோவிலில் இருந்து கொடுமுடிக்கு சென்று வர சிரமமாக இருந்ததால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொடுமுடி அருகே உள்ள கரட்டூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கினார்.
 
வரதராஜனின் மகன் காளமேகப்பெருமாள் மட்டும் வெள்ளக்கோவில் திருவள்ளூவர்நகர் பகுதியில் தங்கியிருந்து பரிகார பூஜைகளை செய்து வந்துள்ளார். பூஜை இல்லாத சமயத்தில் அங்குள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.

காளமேகப்பெருமாளை தினமும் அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். கடந்த 2நாட்களாக செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து மகனை தேடி வரதராஜன் வெள்ளக் கோவிலுக்கு வந்தார். அங்கு காளமேகப்பெருமாள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவர்  இல்லை.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தேடினார். அப்போது வெள்ளக் கோவில் வேப்பம்பாளையம் பி.ஏ.பி., கிளை வாய்க்கால் மதகு அருகே காளமேகப்பெருமாள் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காளமேகப்பெருமாள் உடலில் வெட்டுக்காயங்கள் உள்ளதால் அவரை மர்மநபர்கள் வெட்டிக் கொன்றுள்ளனர். அவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர். மேலும்  சம்பவ இடத்தில் மேப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

பரிகார பூஜை செய்து வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via