பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த லோடு வேன் - 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி.

by Editor / 17-07-2024 11:21:33pm
பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த லோடு வேன் - 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கன்னுக்குடிபட்டியை சேர்ந்த முத்துச்சாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் உள்ளிட்டோர் குழுவாக சேர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் வழியாக திருச்சி சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர். இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற லோடு டெம்போ வேன் பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்து பக்தர்கள் மீது மோதியது. இதில் நடந்து சென்ற பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர். இருட்டு நேரம் என்பதால் மற்ற பக்தர்கள் அனைவரும் அலறியுள்ளனர்.

இந்த விபத்தில் முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் ஆகிய நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் லோடு டெம்போ வேன் வளம்பக்குடி அருகே சென்ற போது டிரைவர் சௌந்தரராஜன் கண் அசந்து தூங்கிவிட்டதாக சொல்லபடுகிறது. இதில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த வேன் பக்தர்கள் கூட்டத்தில் மோதியதில் இந்த கோர விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செளந்தரராஜனை போலீஸார்கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த லோடு வேன் - 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி

Share via