ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 15-08-2021 07:02:34pm
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில தலைமையகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மற்றும் திரளான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் சாரண சாரணியர் தலைமையகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி மரக்கன்றுகளை நட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் அமைச்சர் நிகழ்ச்சியில் பேசியதாவது,

அமைதி, சாந்தம், ஒற்றுமை என்ற பண்புகளைக் கடைப்பிடித்து வெற்றி நடைபோடும் பாரத சாரண சாரணியர் இயக்கத்திற்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிகள் திறந்த உடன் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக பாரத சாரண சாரணியர் இயக்கம் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தை அதிகப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு விட்டனர். இருப்பினும் பள்ளிகள் திறக்க உள்ள சூழலில் தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இரு தவணை தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சுகாதார அமைச்சரிடம் தடுப்பூசி போடுவதில் அரசு ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான பணியை விரைந்து முடிக்கப்படும்.

பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் மாணவர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ள தேவையான அனைத்து பாட பகுதிகளும் ஆசிரியர்களின் சார்பில் கற்றுக் கொடுக்கப்படும். கொரோனா காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாத நிலையில் விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..

 

Tags :

Share via