பதினாறு செல்வங்களை தரும் வரலட்சுமி நோன்பு..
மனிதப் பிறப்பு என்பது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வந்ததே.
மனிதன் வாழ்வதற்கு ஒரு சில தேவைகள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் போன்ற நிலை மாறி இருக்குமிடம் சொகுசானதாகவும் உண்ணும் உணவு சுவையானதாகவும் உடுக்கும் உடை ஆடம்பரமான தாகவும் விரும்பி வாழ்கின்ற காலத்தில் தான் நாம் இருக்கின்றோம்.
இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்ந்த காலம் சென்று சிறப்பாக வாழ்வதற்கான தேடலை மேற்கொள்ளும் காலத்தில் இருக்கிறோம்.
போதும் என்ற மனநிலையை நாம் மறந்துவிட்டோம், ஒரு மனிதன் தன் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களையும் பெற வேண்டும் என்றால், ஒன்று பிறக்கும்போது கிரகங்கள் யோகமான நிலையில் இருக்க வேண்டும், அல்லது முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் அடிப்படையில் செல்வவளம் இருக்க வேண்டும், அல்லது முன் ஜென்மத்தில் பட்ட துன்பங்கள் மாறி தற்போது சிறப்பாக வாழும் நிலையில் உங்கள் உடலானதும், உயிரானதும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
இப்படி இந்த நிலையில் இல்லாதவர்கள் எல்லாம் நலனையும் பெற ஒரு சில சூட்சுமமான முறைகளை நமது முன்னோர்களான சித்தர்கள் காட்டியுள்ளனர்.
அப்படி அவர்கள் காட்டிய விஷயங்களில் ஒன்று தான் இந்த நோன்பு இருக்கும் முறை.
முதல் நாள் இரவு வரை சகல விதமான தவறுகளையும் செய்து விட்டு மறுநாள் அதிகாலை இறைவழிபாட்டை மேற்கொள்வதால் விரதமானது முழுமையடையாது.
சிறுக சிறுக சேர்த்துதான் பெரிய வாழ்வை வாழ முடியும் அதுபோல மனிதன் தன் வாழ்நாளில் சிறிய சிறிய செயல்களை செய்து முடிக்கும் தருவாயில் இதுபோல் வரும் நாட்களை பயன் படுத்தினால் முழுமையான பலனை அடைய முடியும்.
சரி, இந்த வரலட்சுமி நோன்பு விரதத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? முழுமையான பலனைத் தர என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்ப்போம்.
முதலில் வீட்டை நன்றாக சுத்தம் செய்து சிறிது தண்ணீரில் கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், ஜவ்வாது மூன்றும் கலந்து வாசலிலிருந்து பூஜை அறை நோக்கி தெளித்து வர வேண்டும்.
பிறகு வாசலில் பதினாறு மாவிலைகள் கோர்த்து அந்த மா இலைகளில் மஞ்சள் குங்குமம் பொட்டு இட வேண்டும்.
பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து ஏற்கனவே வைத்திருந்த மஞ்சள் குங்குமங்களை எடுத்துவிட்டு புதிதாக வைக்க வேண்டும்.
நன்கு வாசனை தரக்கூடிய மலர்களை இறைவனுக்கு படைக்க வேண்டும்.
பிறகு ஒரு வெற்றிலை இரண்டு பாக்கு எடுத்து கிழக்கு முகமாக நின்று நமது முன்னோர்களான சித்தர் பெருமக்களையும் நமது முன்னோர்களையும் வணங்கி என்னுடைய வறுமை தீர வேண்டும் செல்வச் செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டி வெற்றிலைப்பாக்கின்
மீது 11 ரூபாய் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.
பிறகு அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று வெற்றிலை பாக்கு அருகம்புல் இரண்டு செவ்வாழைப்பழம் வைத்து வணங்கி, ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து அதில் தேங்காய் எண்ணெயை நிரப்பி வாழைத் தண்டு நார் திரி போட்டுத் தீபம் ஏற்றி குடும்பத்தின் பெயரில் அர்ச்சனை செய்து உங்கள் வறுமை நீங்க இந்த பூஜையை மேற்கொள்வதாகவும் அதற்கு எந்த இடையூறும் இல்லாமல் பூஜையானது முழுமையாக நடைபெற வேண்டும் என்று வேண்டியும் தீபமேற்றி வழிபட்டு வரவும்.
பிறகு அருகில் உள்ள காவல் தெய்வத்தின் ஆலயம் சென்று 2 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வீட்டிற்கு வந்து, வீட்டில் இருக்கக் கூடிய பெற்றோர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவி பாலினால் அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமப் பொட்டிட்டு மலர்தூவி வணங்கி அதன் பிறகு இந்த பூஜையை துவங்குவீர்களானால் இந்த பூஜையானது முழுமையடையும்.
அந்த இடத்திலே இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் வீட்டில் உள்ளோரின் மனம் மகிழ்ந்து ஆசிர்வதிப்பார்கள். சகலவிதமான நன்மைகளும் எந்த குறையுமின்றி நிச்சயம் நிறைவேறும் பிறகு இந்த நோன்பை முடித்து ,
5 உயிர்களுக்கு தானம் அளிப்பது சிறப்பு எரும்பு பறவை நாய் பசு மனிதன் இவ்வாறு தானம் அளித்து வழிபாடு செய்வதால் பூஜையானது 100% முழுமையான பலனைத் தரும்.
இப்படித்தான் வரலட்சுமி விரதம் கடைபிடிக்க வேண்டும்.
Tags :