மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு ஒரே நாளில் அணை நீர்மட்டம் 1.27 அடி உயர்ந்தது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பிய நிலையில் உள்ளன.
கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
உபரி நீர் வரத்து காரணமாக நேற்று காலை வினாடிக்கு 18,290 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 37,263 கன அடியாகவும் இன்று காலை நீர் வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று காலை 112.73 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.27 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 84.22 டி எம் சியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காவிரி கரையோரங்களில் முகாமிட்டிருந்த மேட்டூர் அணை மீனவர்கள் தங்களது முகாம்களை மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர். நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அடிபாலாறு செட்டிபட்டி உள்ளிட்ட முகாம்களில் உள்ள மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.
Tags : மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு ஒரே நாளில் அணை நீர்மட்டம் 1.27 அடி உயர்ந்தது.