கடலூரில் அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைப்பதற்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

by Editor / 07-09-2021 02:54:04pm
கடலூரில் அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைப்பதற்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கைகள் 2021-2022 பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்கள்
உள்ளிட்ட பல அறிவிப்புகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார்.அதில் பத்திரிக்கையாளர்கள் நலவாரியம் உருவாக்கப்படும், பணி காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு, இளம் பத்திரிக்கையாளர்கள் பத்திரிக்கை சார்ந்த உயர்கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும் நிதி உதவி, தியாக சீலர்களை நினைவு மண்டபங்கள் மேம்பாடு, சென்னை காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காந்தி ,காமராஜர் ,பக்தவத்சலம் மற்றும் ராஜாஜி ஆகியோரின் நினைவு மண்டபங்கள் மேம்படுத்தப்படும். விடுதலைப் போராட்ட தியாகிகள் மொழிப்போர் தியாகிகள், இலக்கிய படைப்பாளிகள் சமூக நீதிக்காக போராடியவர்கள் ,திராவிட இயக்க முன்னோடிகள் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரை போற்றும் வகையில் அவர்களது திருவுருவ சிலைகளை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. விடுதலைப் போரில் அஞ்சலையம்மாள் அனுபவித்த துயரங்களுக்கும், செய்த தியாகங்களுக்கும் இது சிறந்த அங்கீகாரம். இது வரவேற்கத்தக்கது.கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றுவதற்காக எந்த மண்ணில் அஞ்சலையம்மாள் போராடினாரோ, அதே மண்ணில் அவருக்கு சிலை அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலை அம்மாளுக்கு நினைவு மண்டபமும் அமைக்கப்பட வேண்டும் என்பதே பா.ம.க.வின் கோரிக்கை. வயிற்றில் கருவை சுமந்த நிலையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறைக்கு சென்ற வீரப்பெண்மணி, மகாத்மா காந்தியால் தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாளின் பெருமைகளையும், வரலாற்றையும் இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்!தமிழகத்தின் பிற பகுதிகளில் அப்துல் கலாம், இரவீந்திரநாத் தாகூர், மருது சகோதரர்கள், ப. சுப்பராயன், மு.வரதராசனார், முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் உள்ளிட்டோருக்கு சிலை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பும் வரவேற்கத்தக்கது!” என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo