தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வீட்டு மனை இலவசம்

by Editor / 19-09-2021 10:40:40am
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வீட்டு மனை இலவசம்

ஈரோடு மாவட்டம் பவானியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படுமென வட்டாட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதிலும் 20 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. கடந்த மெகா தடுப்பூசி முகாமின் போது மக்களுக்கு குலுக்கல் முறையில் வெள்ளிக்காசு, தங்க நாணயம், புடவை உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இன்றைக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2 சென்ட் வீட்டுமனை 10 பேருக்கு வழங்கப்படும் என ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் அறிவித்துள்ளார். வட்டாட்சியரின் இந்த அசத்தல் அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக, தடுப்பூசி செலுத்தி கொள்ளும் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

அதே போல, தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் 10 சிறந்த மீம்ஸ்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via