பாம்பை விட்டு கடிக்க வைத்து  மனைவி கொடூர கொலை. கணவர் குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு 

by Editor / 11-10-2021 05:08:37pm
பாம்பை விட்டு கடிக்க வைத்து  மனைவி கொடூர கொலை. கணவர் குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு 


கேரள மாநிலம் கொல்லம் அருகே, பாம்பு கடித்து 25 வயது பெண் இறந்த வழக்கில், அவரது கணவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


நேரடியாக சாட்சிகள் ஏதுமின்றி, சூழ்நிலைகளை மட்டுமே ஆராய்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு மே மாதம் நாகப்பாம்பை வீட்டுக்குள் விட்டு, தனது மனைவி உத்ராவை கொலை செய்த வழக்கில், கணவர் சூரஜ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவருக்கான தண்டனை விவரங்கள் புதன்கிழமை வழங்கப்பட உள்ளது.


ஆரம்பத்தில் எந்த சந்தேகமும் ஏற்படாத இந்த வழக்கில், உத்ராவின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அளித்த தகவலில்தான் சந்தேகத்தின் ஆரம்பப் புள்ளி இருந்தது.


அதாவது, உத்ராவை பாம்பு கடித்து இறப்பதற்கு முன்பு, 2020 மார்ச் 2ஆம் தேதி கட்டுவிரியன் பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுள்ளார். இதனை காவல்துறையினரிடம் உத்ராவின் பெற்றோர் கூறியபோதுதான், விசாரணை நடத்தி வந்த காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.சந்தேகத்தின் அடிப்படையில் சூரஜ் கைது செய்யப்பட்டார். விசாரணையில், சூரஜ் உத்ராவை இதற்கும் முன் மேலும் 2 முறை பாம்பை ஏவி கடிக்க வைக்க முயன்றதும், ஆனால், அந்த பாம்புகள் உத்ராவை கடிக்காமல் விட்டுவிட்டதும் தெரிய வந்தது.


ஒரு கொலை வழக்கை எவ்வாறு அறிவியல்பூர்வமாகவும், தொழில்முறையிலும் விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்பதற்கு இந்த வழக்கில் விசாரணை நடத்திய காவல்துறையினரின் தனிப்படையினரே உதாரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கில், துப்பு துலங்க, தடயவியல், விலங்கின் டிஎன்ஏ உள்ளிட்ட பல நுணுக்கமான விஷயங்களை தனிப்படையினர் விசாரணைக்கு உள்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via