தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

by Admin / 26-10-2021 04:06:47pm
தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதையடுத்து தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை (27-ந்தேதி) உருவாக வாய்ப்பு உள்ளது.
 
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யும்.

நாளை (27-ந்தேதி) நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

28-ந்தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

29-ந்தேதி கடலோர மாவட்டங்கள், அதனையொட்டி உள்ள உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

30-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலையொட்டி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக ஸ்ரீவைகுண்டம், சத்தியமங்கலம் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதற்கிடையே தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via

More stories