சாப்பாட்டில் வி‌ஷம் கலந்து மகளை கொன்று தாய் தற்கொலை

by Admin / 23-12-2021 03:32:12pm
சாப்பாட்டில் வி‌ஷம் கலந்து மகளை கொன்று தாய் தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசபாபதி. இவரது மனைவி கலாமணி (வயது 65). விவசாய கூலித்தொழிலாளி. இவர்களது மகள் பிரியா (39). சிறுவயது முதல் மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்.
 
ரத்தினசபாபதி கடந்த 35 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக கலாமணி தனது மகளை தனியாக கவனித்து வந்தார். வயோதிகம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட மகளை கவனிக்க முடியாமல் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் கலாமணி தனது மகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

அதன்படி சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்த அவர் சாப்பாட்டில் வி‌ஷத்தை கலந்து தனது மகள் பிரியாவுக்கு கொடுத்தார். அதனை சாப்பிட்ட அவர் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் வி‌ஷம் கலந்த சாப்பாட்டை தானும் தின்று தற்கொலை செய்து கொண்டார். நேற்று மதியம் இவர்களது வீட்டிற்கு சென்ற இபுராகிம் என்பவர் 2 பேரும் வீட்டில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கலாமணி, பிரியா ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனநலம் பாதிக்கப்பட்ட மகளை கவனிக்க முடியாத விரக்தியில் மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via