அறுவை சிகிச்சை செய்த வாலிபர் பலி

by Admin / 26-02-2022 11:03:12am
அறுவை சிகிச்சை செய்த வாலிபர் பலி

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஜெருகுமல்லி அடுத்த காபிபள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது28). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஸ்ரீகாந்த் மனைவியுடன் சரிவர குடும்பம் நடத்தாததால் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
 
இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ரீகாந்த் ஊர் ஊராக சுற்றி திரிந்தார். அப்போது விசாகப்பட்டினத்தை சேர்ந்த அசோக் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அசோக்கிடம் ஸ்ரீகாந்த் திருநங்கையாக மாற மும்பைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

மும்பைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்தால் ரூ.1 லட்சம் வரை செலவாகும். எனக்கு தெரிந்த மாணவர்கள் நெல்லூரில் பி.பார்ம் படித்து வருகின்றனர். அவர்கள் குறைந்த செலவில் திருநங்கையாக மாற அறுவை சிகிச்சை செய்வார்கள் என தெரிவித்தார்.

இதையடுத்து நெல்லூர் வந்த ஸ்ரீகாந்த் அங்கு பி.பார்ம் படித்துவரும் ஒரு மாணவி உள்பட 2 மாணவர்களை சந்தித்து திருநங்கையாக மாற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த அவர்கள் 3 பேரும் நெல்லூரில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து ஸ்ரீகாந்துக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

மாணவர்கள் ஸ்ரீகாந்தின் மர்ம உறுப்பை அறுவை சிகிச்சை செய்த போது ஏராளமான ரத்தம் பீறிட்டு வெளியேறியது. ரத்தம் வெளியேறுவதை மாணவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அறை முழுவதும் தேங்கிய ரத்தம் கதவு வழியாக வெளியே வந்தது. இதனைக் கண்டு திடுக்கிட்ட லாட்ஜ் ஊழியர்கள் இதுகுறித்து நெல்லூர் சின்ன பஜார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறைக்கதவை திறந்து பார்த்தபோது அங்கு ரத்த வெள்ளத்தில் ஸ்ரீகாந்த் இறந்து கிடந்தார். அறை முழுவதும் ரத்தம் தேங்கி இருந்தது.

ஸ்ரீகாந்த் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர்.
 

 

Tags :

Share via