நித்திய துறவு தாவரம் ஊர்வன பறப்பன நடப்பன அசுரர் தேவர் இறுதியாக மனித பிறப்பு ஏழாவது வகை பிறப்பாகும்

by Editor / 05-03-2022 08:02:33am
நித்திய துறவு  தாவரம் ஊர்வன பறப்பன நடப்பன அசுரர் தேவர் இறுதியாக மனித பிறப்பு ஏழாவது வகை பிறப்பாகும்

நல்லது கெட்டது.நன்மை தீமை. நல்வினை தீவினை.பேசும் திறன்.கேட்கும் திறன். கொடுப்பது வாங்குவது மற்றும் உண்மை உணரும் திறன்.செயல்படும் திறன். மரணம் எதனால் வருகிறது  மரணம் இல்லாமல் வாழ்வது எவ்வாறு. இவையாவையும் அறிந்து கொள்ளும் அறிவு பெற்றதால் மனிதனுக்கு மட்டும் உயர்ந்த அறிவு பெற்ற மனிதபிறப்பு என்று பெருமையாகச் சொல்லப்படுகிறது. 

மேலும் இயற்கை உண்மை கடவுள் யார்? என்பதை தெரிந்து கொள்ளும் அறிவும் ஆற்றலும் மனிதர்களுக்கு மட்டுமே உண்டு

பெரியோர்கள் வாக்கு !

மேலும் மனிதன் நல்வினை தீவினைக்குத் தகுந்தவாறு சொர்க்கம்.நரகம்.வைகுண்டம் கைலாயம்.பரலோகம். பரந்தாமம்.சத்தியலோகம் போன்ற இடங்களுக்கு ஆன்மாக்கள் அதனதன் செயலுக்குத் தக்கவாறு  செல்லும் என்பதை ஆன்மீக துறவிகள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

மேலும் பாவம் புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு அடுத்த பிறவிகள் எடுத்துக்கொண்டே இருக்கும் என்னும் கருத்துக்களையும். வேதம் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்கள் போன்ற கற்பனை கதைகளின் வாயிலாகவும்.தத்துவ சிற்பங்களின் வாயிலாகவும் சொல்லி உள்ளார்கள்.

நித்திய துறவு !

ஆன்மாவை தெரிந்துகொள்ளவும் இறைவனை தொடர்பு கொள்ளவும் இல்லறத்தில் ஈடுபாடு உடையவர்களால் ஆண்டவரை  அறியமுடியாது. தொடர்பு கொள்ள முடியாது.அருள்பெறமுடியாது என்றும். வாழ்க்கையில் பேரின்ப சித்திப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழவே முடியாது என்றும் சொல்லி வைத்து உள்ளார்கள்.

துறவறம் பெற்று (சந்நியாசம்) வாழ்பவர்களால் மட்டுமே இறைவனைத்  தொடர்புகொள்ளமுடியும் என்றும் இறை அருளைப் பெற்று பேரின்ப லாபத்தை அடையமுடியும் என்றும். ஆன்மீக பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள் 

அதனால் ஆன்மீகவாதிகள் என்றாலே துறவு கோலம் பூண்டவர்கள். காவி உடை அணிந்தவர்கள். சந்நியாசம் பெற்றவர்கள் என்னும் பழக்க வழக்கங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்று மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.

மேலும் பெண்களுக்கு அருள் பெறும் வாய்ப்பும் ஞானம் அடையும் வாய்ப்பும் கிடைக்காது என்றும்.கோயிலின் மூல ஸ்தானத்தின் உள்ளே பெண்கள் செல்லக்கூடாது என்றும் பெண்கள் தத்துவக்கடவுள் சிற்பங்களுக்கு அபிஷேகம் ஆராதணை செய்யக்கூடாது என்றும் சொல்லி வைத்துள்ளார்கள் ஆண்கள்தான் பூசகர்களாக உள்ளார்களேத் தவிர பெண்கள் பூசகர்களாக இன்றுவரை எவரும் இல்லை

ஒவ்வொரு ஊரில் உள்ள ஆலயங்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் நல்லது கெட்டது எது நடந்தாலும் அந் நிகழ்ச்சிகளுக்கு ஆண்கள்தான் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்கிறார்களேத் தவிர பெண்களுக்கு முன்னுரிமை இன்றுவரை தருவதில்லை.
ஆன்மீகத்தில் இன்றுவரை ஆண்கள் ஆதிக்கமே சிறந்து விளங்குகிறது அதுவும் துறவிகள் என்றால் அவர்களை தெய்வங்களாக பாவித்து வணங்கி வழிபாடு செய்துவருகிறார்கள். 

இதில் வள்ளலார் முற்றிலும் வேறுபடுகிறார் 

துறவிகள் என்றால் யார்? என்பதை வள்ளலார் தெரியப்படுத்துகிறார்

நித்தியத் துறவு ! 

நித்தியத் துறவு என்பது ! அறம் பொருள் இன்பம் வீடு இந்த நான்கையும் நித்தியம் 4 நான்கு காலங்களிலும் செய்து அனுபவித்துப் பின்பு பற்றுஅற்று இருப்பதே "நித்தியத்தை" அடைவதற்கு ஏதுவாக இருக்கும் என்கிறார். 

நித்தியம் என்பது நம்மை படைத்த கடவுளைக் குறிப்பதாகும்.

கடவுளைத் தொடர்பு கொள்ளவும் அருளைப்பெறவும் தகுதி வாய்ந்தவர்கள் யார் என்பதை வள்ளலார் மிகவும் தெளிவாக சொல்லி உள்ளார்.

இல்லறத்தில் ஈடுபாடு கொண்டு அறத்துடன் (ஒழுக்கத்துடன்) வாழ்ந்து நியாயமான முறையில் பொருள் ஈட்டி.
அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்துவிட்டு ஆனந்தம் அடைவதாகும். அதாவது (ஆனந்தம் என்பது சதாகாலமும் சந்தோஷத்தோடு எதிரிட்ட ஜீவர்களைத் திருப்தியால் சந்தோஷிப்பித்துத் தான் அதிசயம் இன்றி நிற்றல்)  ஆன்ம இன்ப லாபத்தை அடைவதாகும். ஆண்டவருடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் ஆன்மா ஆன்ம இன்ப லாபம் பெற்றால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியும்

இதைத்தான் வள்ளலார் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார்

அறம் என்பது இந்திரிய ஒழுக்கம்

பொருள் என்பது கரண ஒழுக்கம்

இன்பம் என்பது ஜீவ ஒழுக்கம்

வீடு என்பது ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்.

மேலே கண்ட நான்கையும் நான்கு காலங்களில் முழுமையாக முறையாக செய்து அனுபவிக்க வேண்டும்.பின்பு அனுபவித்து விட்டோம் என்ற மனநிறைவோடு. அவற்றின் மீது விருப்பம் இல்லாமல் பற்று அற விட்டு இடைவிடாது இறைவனை தொடர்பு கொள்வதே சிறந்த செயலாகும். 

அவ்வாறு தொடர்பு கொள்வதால் ஆண்டவரிடம் அருளைப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆகலாம் என்பதை வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்

சந்நியாசமும் காவி உடையும்.!

மூன்று ஆசைகளில் விசேஷம் பற்று உள்ளவர்களாகித் தயவு இல்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்று கொள்ள வேண்டும்.மேற்படி குற்றம் அற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை

சந்நியாசி காவி வேட்டி போடுவதற்கு நியாயம்.கடின சித்தர்கள் ஆகையால் தத்துவ ஆபாச உள்ளது.

தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி.அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி உடையாகும்.

வெற்றியான பிறகு அடைவது தயவு.ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை.தயவு வெள்ளை என்பதற்கு நியாயம்.தயவு என்பது சத்துவம்.சத்துவம் என்பது சுத்தம் சுத்தம் என்பது நிர்மலம்.நிர்மலம் என்பது வெள்ளை வரணம்.வெள்ளைஎன்பது ஞானம். ஞானம் என்பது அருள்.அருள் என்பது தயவு.தயவு என்பது காருண்யம். 

எனவே ஜீவ காருண்யமே முதன்மையானதாகும்

மேலே கண்ட செய்தியை ஊன்றி படிக்க வேண்டும்.

தயவில்லாத கடின சித்தர்களாகிய காவி உடை அணிந்த சந்நியாசிகள் ஜீவகாருண்யம் செய்ய வாய்ப்பில்லாதவர்கள் துறவிகள. ஆகையால் அவர்களுக்கு அருளைப் பெறும் வாய்ப்பு  குறைவாக உள்ளது என்கிறார்.

திருவள்ளுவரும் சொல்கிறார்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை!* 

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் துணை ! 

என்று இல்வாழ்க்கை என்ற தலைப்பில் தெளிவாக சொல்லுகிறார்.

தயவுடைய இல்லறவாசிகள் சந்நியாசிகளுக்கும் (துறவிகள்) எழைகளுக்கும் இறந்தவர்களுக்கும் துணையாக இருக்கின்றார்கள். 
 இல்லறவாசிகள் ஜீவகாருண்ய வல்லபத்தால்.  அன்பும் அறிவும் விளங்கி உலக பற்று இல்லாமல் வாழ்ந்து  அருளைப்பெற்று மரணத்தை வெல்லலாம் என்பதே சத்தியமான உண்மையாகும்.

எனவே நித்திய துறவு என்பது அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கையும் நான்கு காலங்களில் அனுபவித்து பின்பு பற்றிய பற்று அனைத்தையும் பற்று அற விட்டு இடைவிடாது இறைவனை தொடர்பு கொண்டு அருளைப்பெறுவதே நித்திய துறவறமாகும்.

வள்ளலார் பாடல்!

மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ

சற்றும் அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை

எற்றி நின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழி கொண்டு உலகீர்

பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.! 

எனவே சந்நியாசம் பெற்று துறவறம் செல்வதை விட இல்லறவாசிகளான சுத்த சன்மார்க்கிகள் எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி ஒத்து உரிமையுடன் ஜீவகாருண்யம் செய்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்மீது  அளவில்லா அன்பும் பற்றும்  கொண்டு வாழ்ந்தும் அருளைப்பெறுவதே நித்திய துறவாகும் என்கிறார் வள்ளலார்.
 

 

Tags :

Share via