பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள்

by Editor / 13-03-2022 09:14:23pm
பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள்

பங்குனி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். 
பங்குனி மாதம் என்பது வணங்குவதற்கும் பூஜைக்கும் உரிய மாதம். 
பங்குனி மாதம் என்பது வைபவங்களுக்கான மாதம். இப்படி அற்புதமான பங்குனி மாதத்தை தெய்வ மாதம் என்றே போற்றுகின்றனர்.

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும் விரதம் இருப்பதும் வழக்கம். 
ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவம் உண்டு. தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்று புராணங்கள் சொல்கின்றன.

மாதங்களில் 12வது மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம் என்று கொண்டாடப்படுகிறது. 
எனவே பங்குனி மாத உத்திரத்தின் சிறப்புகள் அதிகம். 

விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது பங்குனி உத்திர விரதமும் ஒன்று.
சிவபெருமானை கல்யாண சுந்தரமூர்த்தியாக பாவித்து அனுஷ்டிக்கும் விரதநாள் இன்று.
இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். உத்திர நட்சத்திர நாயகன் அதாவது அதிபதி சூரியன். அதே நாளில் நிறை நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன.

மீனாட்சியைத் திருமணம் செய்துக் கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். 
சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.
பர்வதராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த  பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.
முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் பங்குனி உத்திர நன்னாளில்தான். 
தேவர்களின் தலைவன் என்று போற்றப்படுகிற தேவேந்திரன் இந்திராணியைத் திருமணம் செய்துகொண்டதும் பங்குனி உத்திர நன்னாளில்தான்.
நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான், அழகும் திறனும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது இதே பங்குனி உத்திர நாளில்தான் என்கிறது புராணம்.
ஸ்ரீராமபிரான் - சீதாதேவி, 
லட்சுமணன் - ஊர்மிளை,
பரதன் - மாண்டவி, 
சத்ருக்னன் - ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம் என புராணங்கள் விவரிக்கின்றன.

மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள். 
படைப்புக்கடவுளான பிரம்மா, தன்னுடைய நாவில் ஸ்ரீசரஸ்வதி தேவியை வைத்துக் கொண்டது பங்குனி உத்திர நாளில்தான்! 

அதேபோல், ஸ்ரீவள்ளி அவதரித்த நாளும் பங்குனி உத்திரம் என்கிறது புராணம்.
ஐயப்ப அவதாரம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர நன்னாளில்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஸ்ரீரங்க மன்னார் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். 

பங்குனி உத்திர நாளில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 
கிராமக் கோயில்களில், அக்கினிச்சட்டி ஏந்தும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.
எண்ணற்ற ஆலயங்களில், சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறும். 
பங்குனி உத்திரப் பெருந்திருவிழா நடைபெறும். பத்துநாள் விழாவாக கோலாகலமாக நடைபெறும்.
வருகின்ற 18-03-2022ம் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் நாளாகும். இந்த நன்னாளில், அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வோம். திருக்கல்யாணம் நடைபெறும் ஆலயத்துக்குச் சென்று, திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிப்போம். 

தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். முடிந்தால், அன்றைய தினம் விசேஷ பூஜைக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்குவோம். அன்னதானம் செய்வோம். முருகப்பெருமானுக்கு செவ்வரளியும் மகாலக்ஷ்மி தாயாருக்கு வெண்மை நிற மலர்களும் சிவனாருக்கு வில்வமும் வழங்கி வேண்டிக்கொள்வோம்.

 

Tags :

Share via