தடையை மீறி பிக்பாஸ் ஷூட்டிங்:- அரங்கை சீல் வைக்க முடிவு!

by Editor / 20-05-2021 08:03:22am
தடையை மீறி பிக்பாஸ் ஷூட்டிங்:- அரங்கை சீல் வைக்க முடிவு!

தமிழில் தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு ஷோவாக விளங்கி வருகிறது. இதனையடுத்து மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பிக்பாஸ் வெளிவருகிறது. இதன் ஷூட்டிங் பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் அரங்குகள் அமைத்து நடத்தப்படுகிறது. 
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் இங்கு படப்பிடிப்பில் ஈடுபட்ட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தபட்டனர். அதுமட்டுமின்றி கொரோனா ஊரடங்கு முடியும் வரை மே 31 ம் தேதி வரை தொலைக்காட்சி மற்றும் சினிமா என எந்தவித படப்பிடிப்பும் நடக்காது என பெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்து இருந்தார். 
இந்த நிலையில் மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பில் இருந்த ஆறு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சன், மற்றும் பூந்தமல்லி தாசில்தார் சங்கர் ஆகியோர் தலைமையில் மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் அரங்கிற்கு சென்று அங்கு நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை செய்து வருகின்றனர்.

அபராதம் - சீல்:

இந்த நிலையில் விதிமுறைகளை பின்பற்றாத மலையாள பிக்பாஸ் அரங்கிற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தியதையடுத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் மலையாள பிக்பாஸ் அரங்கத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைக்க முடிவு செய்து பிக்பாஸ் அரங்கத்தின் மூன்று நுழைவாயிலுக்கு சீல் வைத்தனர். இதையடுத்து படப்பிடிப்பு நடைபெறாது என்றும், பிக்பாஸ் அரங்கத்திற்குள் உள்ள 7 நடிகர்கள், நடிகைகள் கொரோனா கவச உடைகளுடன் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தபட்டனர். அவர்களின் உடமைகள் எடுக்க சிறிது கால நேரம் கொடுக்கப்பட்டது அவர்களும் அங்கிருந்து கார்களில் கிளம்பி சென்றனர். 
உள்ளே படப்பிடிப்பில் ஈடுபட்ட 60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பிலிருந்தும் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்த பிக்பாஸ் அரங்கத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது ஈவிபி பிலிம் சிட்டிக்கே சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via