மிரட்டல் விடுக்கும் இளைஞரை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு:

by Editor / 01-06-2021 11:30:49am
மிரட்டல் விடுக்கும் இளைஞரை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு:

பிரபலங்களுக்கு மிரட்டல் விடுக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக விழுப்புரம் எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, எழும்பூரில் தமிழகக் காவல் துறையின் தலைமைக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு நேற்று இரவு பேசிய நபர், "சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்" எனக் கூறிவிட்டு, தொலைபேசி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டுக்குச் சென்று, சோதனை நடத்தினர். எனினும், வீட்டிலிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியைப் பரப்பும் வகையில் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தினர்.

மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்ட செல்போன் எண்ணைக் கொண்டு, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் விசாரித்ததில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வர் (26) என்பது தெரியவந்தது. இவர் சற்று மனநலம் பாதித்தவர்.

இவர் ஏற்கெனவே தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட பலர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கியவர்.

இந்நிலையில், தொடர்ந்து தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கும் புவனேஸ்வர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விழுப்புரம் எஸ்.பி. ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஸ்வருக்கு 100க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் நினைவில் உள்ளன. தொலைபேசி கிடைத்தால் யாரோ ஒருவருக்கு இதுபோன்று மிரட்டல் விடுக்கிறார். இவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிடுமாறு விழுப்புரம் ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆட்சியரின் உத்தரவுக்குப் பின் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்'' என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories