இறப்புச் சான்றிதழில் கொரோனா  உயிரிழப்பு என குறிப்பிடவேண்டும்  எடப்பாடி பழனிசாமி கோரிக்கை 

by Editor / 08-06-2021 05:37:50pm
 இறப்புச் சான்றிதழில் கொரோனா  உயிரிழப்பு என குறிப்பிடவேண்டும்  எடப்பாடி பழனிசாமி கோரிக்கை 




கொரோனா நோய்தொற்றால் இறந்தவர்களை வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்புச் சான்றிதழ் தருவதாக பல்வேறு புகார்கள் வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தால் இறப்புச் சான்றிதழில் கோவிட் உயிரிழப்பு என குறிப்பிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்தொற்றின் காரணமாக தமிழகத்தில்  இறந்தவர்களின் எண்ணிக்கை 27,356 ஆகும். கடந்த ஒருசில வாரங்களாக கொரோனா நோய்தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா நோய்தொற்றால் இறக்க நேரிட்டவர்களுக்கு, அவர்களது இறப்புச் சான்றிதழில் கொரோனா நோய்தொற்றால் இறந்தார்கள் என்று குறிப்பிடுவதில்லை.
மாறாக, கொரோனா நோய்தொற்றால் இறந்தவர்களை வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்புச் சான்றிதழ் தருவதாக மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர். கொரோனா நோய்தொற்றினால் இறப்பவர்கள், கொரோனா வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், கொரோனா நோய்தொற்றினால் இறந்தவர்களை வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்பு சான்றிதழ் தருவதால், ஒருசிலர் இறந்தவர்களது உடல்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று உற்றார் உறவினர் கலந்துகொள்ளும் வகையில் இறுதிச் சடங்கை மேற்கொள்கின்றனர்.
இதனால் கொரோனா நோய்தொற்று முழு அளவில் பரவக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் இறப்புச் சான்றிதழில் வேறு காரணங்களை குறிப்பிடுவதால், கொரோனா நோய்தொற்றால் பெற்றோர்களை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசு கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களது இறப்புச் சான்றிதழில் கொரோனா நோய்தொற்றினால்தான் அவர்கள் இறந்தார்கள் என்ற சரியான காரணத்தை குறிப்பிட்டு சான்றளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via