இந்தியா - இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ரத்து

by Editor / 10-09-2021 07:55:04pm
இந்தியா - இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ரத்து

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் இந்திய அணியின் வியாழக்கிழமை பயிற்சி ரத்தானது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது.

எனினும் இன்று மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். வரும் நாள்களில் கரோனா பாதிப்பு மேலும் அதிகமானால் என்ன செய்வது என அவர்கள் அச்சப்பட்டார்கள். இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது பிசிசிஐ. இதன் முடிவில் 5-வது டெஸ்ட் ரத்தானதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிசிசிஐயுடனான பேச்சுவார்த்தையின் முடிவில் 5-வது டெஸ்ட் ரத்தாகியுள்ளது. இந்திய அணியின் குழுவில் கரோனா பாதிப்பு அதிகமாகும் என்கிற அச்சம் இந்திய வீரர்களிடம் நிலவுகிறது. இதனால் டெஸ்டில் அணி வீரர்களைக் களமிறக்க முடியாத நிலையில் உள்ளது இந்தியா. டெஸ்ட் ரத்தானதால் வருத்தமடையும் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via