கலைஞர் நினைவு நூலகம் தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

மதுரையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “2017-2018ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் தனித்தன்மை வாய்ந்த நூலகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியிட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே துறை சார்பில் அறிவித்தபடி தனித்தன்மை நூலகம் மற்றும் காட்சியங்கள் அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 7 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் பழமை நாகரீக நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 70 கோடி ரூபாயில் மதுரையில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி, “சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது. அதே போல மதுரையில் அமையப்போகும் கலைஞர் நினைவு நூலகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்களது பாராட்டுக்கள். மதுரையில் அமைய உள்ள நூலகம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெருமளவு பயன் தரும்” என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
Tags :