ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் சங்கிலி பறிப்புபிரபல கொள்ளையன் கைது.

by Editor / 29-07-2024 09:50:11am
ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் சங்கிலி பறிப்புபிரபல கொள்ளையன் கைது.

சேலம் மாவட்டம், சேலம் டவுன் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் அவரது மனைவி சித்ரா (37) பிள்ளைகள் ஆகியோர் குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் சென்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும் ஏற்கனவே நோட்டமிட்ட வாலிபர் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த சித்ராவின் கழுத்தில் இருந்த தாலி சயின் உட்பட 6 சவரன் நகையை கழுத்தில் இருந்து பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து சித்ரா கூச்சலிட்டதும் அவரது கணவர் உட்பட அக்கம் பக்கத்தினர் வாலிபரை மடக்கி பிடிக்க தூரத்தி உள்ளனர். அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலிசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அந்த நபரை தீவிர விசாரணை நடத்தியதில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த நசிர் மகன் அனஸ் (30) என்று தெரியவந்துள்ளது. பின்னர் அந்த வாலிபர் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் இவர் மீது ஏற்கனவே கோவை, கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் எங்கு எல்லாம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்று ஜோலார்பேட்டை இருப்புப்பாதை போலிசார் தீவிர விசாரணை நடத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

 

Tags : ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் சங்கிலி பறிப்புபிரபல கொள்ளையன்  கைது.

Share via