தமிழக ஆளுநர் சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை விதைக்கிறார்-திருமாவளவன்

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாஞ்சாகுளம், குறிஞ்சாகுளம் ஆகிய கிராமங்களில் நடந்த தீண்டாமை சம்பவங்களைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் வடக்கு ரத வீதியில் நடைபெற்றது. அப்போது தீண்டாமை சம்பவங்களைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: “பாஞ்சாகுளத்தில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகக் கூறியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிஞ்சாகுளம் நிலத்தகராறு தொடர்பாக 140 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டும்.அதற்காகத்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இந்தியாவிலேயே அதிகமாக சாதிய வன்கொடுமை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வருகிறது இது காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம். பதிவாகாத வழக்குகள் ஏராளமாக உள்ளன. இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு.முதல்வரின் கவனத்திற்கு மீண்டும் நாங்கள் எடுத்துச் சொல்வோம்.
இந்தியாவில் ஆர் எஸ் எஸ் க்கு எதிரான அரசியல் இப்போது தலை தூக்கி இருக்கிறது தமிழகத்தில் அது வலுவாக இருக்கிறது.ஆனால் தமிழக ஆளுநர் சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை விதைக்கிறார். கிறிஸ்தவர்களைத் திட்டமிட்டு திருக்குறளைத் தவறாக மொழி பெயர்த்து விட்டார் எனச் சொல்லுவது என்பது அபத்தத்திலும் அபத்தம். கிறிஸ்தவ சமுதாயத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறார்.
இந்து சமய அறநிலையத் துறையைச் சைவ சமயத்துறை என்றும் வைணவ சமய துறை என்றும் இரண்டாகப் பிரிக்க வேண்டும்.அவை தனித்தனியே இயங்குவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
Tags :