குடியால் வந்த வினை - போதையில் தன் தந்தையை கொலை செய்த மகன்!

by Editor / 16-06-2021 02:29:52pm
குடியால் வந்த வினை - போதையில் தன் தந்தையை கொலை செய்த மகன்!

விழுப்புரம் அருகே பிரபல சாராய வியாபாரியை அவரது மகனே மதுபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான புலிமூட்டை என்கிற ரங்கநாதன். இவர் அப்பகுதி மக்களுக்கு சாராயம் விற்பனை செய்து வந்திருக்கிறார். இவரது மகன் மணிகண்டன்.

சாராய வியாபாரியின் மகனான மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்று தந்தை ரங்கநாதனோடு தகராறு செய்வது வழக்கம்.அதேநேரத்தில் எந்த வேலைக்கும் செல்லாத மணிகண்டன் செலவிற்காக பணம் கேட்டு ரங்கநாதனை தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.

ஒவ்வொரு முறையும் ரங்கநாதம் பணம் கொடுக்க மறுக்கும்போதெல்லாம் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அதேபோன்று, சம்பவத்தன்று இரவும் மது போதையில் வீட்டிற்கு சென்ற மணிகண்டன் தந்தையிடம் பணம் கேட்டு சட்டையிட்டிருக்கிறார். ரங்கநாதம் பணம் கொடுக்காததால் தன்நிலை மறந்த மணிகண்டன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை என்றுகூட பார்க்காமல் ரங்கநாதானின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் திருவெண்னைய்நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரங்கநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தந்தையை கொலை செய்ததுக்கூட தெரியாமல் கடுமையான மதுபோதையில் இருந்த மணிகண்டனை கைது செய்தனர்.

மதுபோதையில் பணம் தராத தந்தையை மகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருவெண்ணைநல்லூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via