கணவன் மனைவி தற்கொலை

by Staff / 13-11-2022 02:11:50pm
 கணவன் மனைவி தற்கொலை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முத்தையன் கோவில், சென்னிமலை ஆண்டவர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 31). தையல்காரர். திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் ஜானகி (23). ஜெயக்குமாரும், ஜானகியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய மகன்கள் நித்திஷ் (5), ராகவ் (4). ஜெயக்குமார் தனியார் வங்கியில் மாத தவணைக்கு ரூ. 16 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டியதாக கூறப்படுகிறது.

ஜெயக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால், கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீடு கட்ட வாங்கிய கடனை செலுத்துவது சம்பந்தமாக கடந்த 10-ந் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஜானகி மனவேதனையில் விஷம் குடித்து விட்டார். இதனால் வாந்தி எடுத்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜானகி இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மனைவி இறந்த துக்கத்தில் ஜெயக்குமார் மனம் உடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ஜெயக்குமாரின் வீட்டுக்கு அவருடைய உறவினர்கள் ஜானகியின் இறப்பு குறித்து துக்கம் விசாரிக்க வந்திருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் சென்ற ஜெயக்குமார் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு துப்பட்டாவால் தூக்குப்போட்டு ஜெயக்குமார் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்தும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 2 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

 

Tags :

Share via