மார்கழி மாதத்தின் மகத்துவம்-அதாவது செல்வம் மிகுந்த மாதம்

by Editor / 15-12-2022 09:23:09pm
 மார்கழி மாதத்தின் மகத்துவம்-அதாவது செல்வம் மிகுந்த மாதம்

மார்கழி மாதத்தின் மகத்துவம்.
மேற்கத்திய கலாச்சாரம் நமது வேலையில் ஊடுருவி தற்போது நமது வாழ்க்கை முறையிலும் ஊடுருவிவிட்டது. முக்கியத்துவம் நிறைந்த விஷயங்கள் நமது நேரத்தை ஆக்கிரமித்தது போய் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நமக்கு பயன்தராத விஷயங்களுக்கு நாம் அதி முக்கியத்துவம் கொடுத்து அதில் நேரத்தை வீணடித்து அதை பெருமையாக கருதும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

மார்கழி மாதம் 16 ம் தேதி பிறக்கிறது. இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். மார்கழி என்பது எண்ணற்ற மகத்துவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான மாதமாகும். கிருஷ்ண பரமாத்மா கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாவேன்” என்று கூறுகிறானென்றால் மார்கழியின் சிறப்பை யூகித்துக்கொள்ளுங்கள்.

அப்படி என்றால் அதை ஏன் பீடை மாதம் என்கிறார்கள் என்று சிலர் கேட்கக்கூடும். அது பீடை மாதம் அல்ல… பீடுடைய மாதம் (அதாவது செல்வம் மிகுந்த மாதம்) என்பது தான் மருவி நாளடைவில் பீடை மாதம் என்றாகிவிட்டது.

நம் சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. காரணம் இவை முழுக்க முழுக்க இறைவழிப்பட்டுக்கு என்றே ஒதுக்கப்படவேண்டிய மாதங்கள். அதிலும் மார்கழி மகத்துவம் நிறைந்தது. எனவே நம் வாழ்வை அர்த்தமுள்ள தாக்கி கொள்ளவேண்டுமானால், இம்மாதத்தில் சரணாகதி என்னும் உயர் தத்துவத்தை கடை பிடிக்கவேண்டும்.

மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்” என்று வட மொழியில் சொல்வர். “மார்கம்” என்றால், வழி- “சீர்ஷம்” என்றால், உயர்ந்த- “வழிகளுக்குள் தலைசிறந்தது” என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இதற்கும் காரணமிருக்கிறது.

மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். 

மார்கழியில் காலையில் எழுந்து வெளியே நடந்தால் ஓசோன் வாயு நுரையீர லுக்கு என்று புத்துணர்ச்சி தரும். மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.மனம் தூய்மையாகும்.

கோலமும், பாடலும் மனதை ஒருமைப்படுத்தி உணர்வுகளைச் செம்மைப்படுத்தும். கோலத்திற்கு அரிசி மாசு பொடி பயன்படுத்துவது நல்லது. சாதாரண கோலப் பொடிகளை பயன்படுத்தக் கூடாது.

நிறைய தொலைத்து விட்டோம் இதையாவது இழக்காமல் அனுபவிப்போமே. எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும் 

 

Tags :

Share via