ரோஜா பூக்களுக்குத் தடை விதித்தது நேபாள அரசு

by Staff / 11-02-2023 02:15:40pm
ரோஜா பூக்களுக்குத் தடை விதித்தது நேபாள அரசு

பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரோஜாக்கள்தான். பெரும்பாலும் ரோஜாக்களை கொடுத்துதான் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரோஜாக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது.

நேபாள தாவர தனிமைப்படுத்தல் மையம் மற்றும் பூச்சிக்கொல்லி மேலாண்மை மையம், தாவர நோய் அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது எனக் கூறி இந்தியா மற்றும் சீனா எல்லையில் உள்ள 15 சுங்கச் சாவடிகளுக்கு ரோஜா பூக்களுக்கு இறக்குமதி அனுமதி வழங்க கூடாது என வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, நேபாள தாவர தனிமைப்படுத்தல் மையம் மற்றும் பூச்சிக்கொல்லி மேலாண்மை மைய தகவல் அதிகாரி மகேஷ் சந்திர ஆச்சார்யா கூறியுள்ளதாவது: ரோஜா பூக்கள் மற்றும் பிற தாவரங்களின் மூலம் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற நோய்கள் குறித்த முறையான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.3 மில்லியன் மதிப்புள்ள 10,612 கிலோ ரோஜா பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த முடிவு சந்தையில் ரோஜாக்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தும். காதலர் தினத்தன்று நேபாளத்தில் சுமார் 3,00,000 ரோஜா பூக்கள் விற்கப்படுகின்றன. நேபாளத்தில் 20,000 ரோஜா பூக்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.80 சதவீத பூக்களின் தேவை இறக்குமதி மட்டுமே பூர்த்தி செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via