கிணற்றுக்குள் தவறி விழுந்த தொழிலாளி பலி.
பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை, மேலப்பாளையம் பகுதியில் ஓட்டப்பாறை பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே, சுமார் 80 அடி ஆழமுள்ள பொது கிணறு ஒன்று உள்ளது. தண்ணீர் நிரம்பி இருந்த இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவற்றின் மேல், அந்தப் பகுதியைச் சேர்ந்த தறிப்பட்டறை தொழிலாளியான சேகர் (35) என்பவர் படுத்திருந்துள்ளார். எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்க முயன்று முடியாமல் போகவே, சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால், அவர் நேரில் மூழ்கி இறந்திருக்க கூடும் எனகொக்கிகளை பயன்படுத்தி தண்ணீருக்குள் இருந்த அவரது சடலத்தை மீட்க முயற்சித்தனர். அது முடியாமல் போகவே, மூன்று மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்றது. தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட நிலையில் சேகரின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவத்தின் போது அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடினர். மீட்பு பணியில் இடையூறு ஏற்படாத வகையில், சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags :