ஜாமீன் கோரி நீதிமன்றத்தில்  ஹெச் ராஜா.மனு 

by Editor / 13-07-2021 06:02:24pm
  ஜாமீன் கோரி நீதிமன்றத்தில்  ஹெச் ராஜா.மனு 



உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு, திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு கோவில் நிகழ்ச்சியில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா கலந்துகொண்டார். அப்போது, மேடை அமைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. 
அப்போது, எச் ராஜா காவல் ஆய்வாளர் மனோகரனை பார்த்து ஆக்ரோஷமாக கத்தினார். மேலும், நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசினார். இதனடிப்படையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த புகாரின் அடிப்படையில் ஹெச் ராஜா மீது வழக்கு பதியப்பட்டது.மேலும், திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் ஹெச் ராஜா தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹெச் ராஜா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரின் அந்த மனுவில், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நான் தலைமறைவாக உள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. 
எனவே, இந்த வழக்கில் நான் காவல்துறையினர் என்னை கைது செய்ய நடவடிக்கை ஈடுபடாமல் இருப்பதற்காக எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அணைத்து கட்டுப்பாடுகளுக்கும் நிபந்தனைகளுக்கும் நான் உடன்பட தயாராக இருக்கிறேன்" என்று ஹெச் ராஜா தனது ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Tags :

Share via

More stories

Logo