நல்ல பாம்பை கழுத்தில் தொங்கவிட்டபடி டீக்கடைக்குள் புகுந்த முதியவர் - அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.

by Editor / 28-04-2023 06:53:35pm
நல்ல பாம்பை கழுத்தில் தொங்கவிட்டபடி டீக்கடைக்குள் புகுந்த முதியவர் - அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் என்ற பகுதியானது எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய ஒரு பகுதியாகும்.அதாவது, தமிழக-கேரளா எல்லைப் பகுதியான புளியரை வழியாக செல்லும் சரக்கு லாரி ஓட்டுனர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால், இந்தப் பகுதியில் உள்ள கடைகளில் தான் பொதுவாக வாங்கி செல்வார்கள்.இதன் காரணமாக பிரானூர் பார்டர் என்ற பகுதி எப்போதுமே மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாகவே காணப்படும்.இந்த நிலையில், இன்று வழக்கம் போல் மக்கள் கூட்டம் இருந்த நிலையில், அங்குள்ள ஒரு டீக்கடையில் டிரைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது, அங்கு கழுத்தில் நல்ல பாம்பை தொங்கவிட்டபடி,பிரானுர் பார்டரை சேர்ந்த டெய்லர் ஜப்பார் என்பவர் வேகமாக வந்து 'எனக்கு ஒரு டீ போடு' என்று கூறவே, அங்கு டீ குடிப்பதற்காக நின்று கொண்டிருந்த பொதுமக்கள் 'பாம்பை கண்டால் படையும் நடுங்கும்' என்ற வாசகத்துக்கு ஏற்ப அலறி அடித்துக் கொண்டு தெரிந்து ஓடினர்.இருந்தபோதும் இதை எதையுமே அலட்டிக் கொள்ளாமல் அந்த வயதான முதியவர் எதார்த்தமாக பேசியபடி கழுத்தில் நல்ல பாம்பை தொங்க விட்டபடி, டீயை வாங்கி குடித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.நல்ல பாம்பை கழுத்தில் தொங்க விட்டபடி, டீக்கடைக்கு வந்து டீ குடித்த முதியவர் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்ற நிலையில், பாம்பை பார்த்த பொதுமக்களோ அந்த அச்சத்தில் இருந்து மீள முடியாமல் திகைத்து நின்றனர்.பின்னர் நல்லபாம்பை குண்டாற்று கரையோரத்தில் உள்ள வயல் வெலிக்களுக்குள் சென்று விட்டுவிட்டு அவர் தனது வேலையை பார்க்க சென்றார்.

நல்ல பாம்பை கழுத்தில் தொங்கவிட்டபடி டீக்கடைக்குள் புகுந்த முதியவர் - அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.
 

Tags :

Share via