வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு – முதலமைச்சர் ஸ்டாலின்
டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.2 கோடி ஊக்கப் பரிசு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு:
தமிழ்நாட்டின் ‘தங்கமகன்’ என தடகள விளையாட்டுப் போட்டிகளில் புகழ்பெற்ற திரு.மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோ பாரலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் மீண்டும் பெருமை தேடித் தந்திருக்கும் அவரைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
ஏழ்மையான வாழ்வையும், சவாலான உடல்நிலையையும் சளைக்காத தன் திறமையால் வென்று, ஒவ்வொரு இளைஞர் உள்ளத்திலும் ஊக்கத்தை விதைக்கும் அவர் பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது எனப் பல பெருமைகளைப் பெற்றிருக்கிறார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் திரு.மாரியப்பன் தங்கவேலு அவர்களின் வெள்ளிப்பதக்கச் சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அளிக்கப்படுகிறது.
விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் சாதனைப் பயணம் தொடரட்டும்.
இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags :