கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்தவர் வீட்டுக்கு சீல் வைப்பு

ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி சேப்பெருமாள் தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் நாகராஜ் (வயது 36). இவர், தனியார் நிறுவனம் தொடங்கி அதில் தன்னுடைய தாய் மணி, மனைவி சத்யா, அக்காள் கோகிலா ஆகியோரை இயக்குனர்களாக நியமித்தார்.இதன்மூலம் நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு சில நாட்களில் நாகராஜ் கூறியபடி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வட்டி தொகை வரவு வைக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் அவரை தேடி சென்றனர். அங்கு நாகராஜ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது.இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர். இதற்கிடையே மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராஜ் முன்னிலையில் வருவாய்த்துறையினர் நாகராஜ் வீட்டிற்கு சீல் வைத்தனர்.
Tags :