ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கில்ஆக.5-ம் தேதி இறுதி விசாரணை

by Editor / 17-07-2021 10:26:33am
ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கில்ஆக.5-ம் தேதி இறுதி விசாரணை

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை . எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 4ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு, மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார். இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தும் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நேரடி விசாரணையாக நடைபெறும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

 

Tags :

Share via