6 வயது சிறுவனை கொலை செய்த தந்தை கைது கிணற்றில் உடல் மீட்பு

by Editor / 22-08-2023 10:32:31pm
6 வயது சிறுவனை கொலை செய்த தந்தை கைது கிணற்றில் உடல் மீட்பு


 சிவகிரி அருகேயுள்ள தென்மலை செல்லிபட்டிணம் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா மகன் முனியாண்டி (வயது 45). பெயிண்டர். இவரது மனைவி கார்த்தீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. முனியாண்டிக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் முனியாண்டிக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 
இதன் பின்னர் மதுபோதையில் முனியாண்டி தனது இளைய மகன் மகிழன் (6) படிக்கும் பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளியில் இருந்த மகிழனை தன்னுடன் வந்தால் மிட்டாய் வாங்கித்தருவதாக முனியாண்டி கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பி மகிழன் தனது தந்தையுடன் மொபட்டில் பள்ளியில் இருந்து புறப்பட்டுள்ளான். ஆனால் அதன் பின்னர் மகிழன் பள்ளிக்கோ, வீட்டிற்கோ திரும்பவில்லை. மாலை வரை வீட்டிற்கு மகன் வராததை கண்ட கார்த்தீஸ்வரி சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார்;; பள்ளி சிறுவனை காணவில்லை என வழக்கு பதிவு செய்து அவனை தேடி வந்தனர். 

இந்நிலையில் முனியாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், முனியாண்டி புளியங்குடிக்கு தனது மகன் மகிழனை அழைத்துச் சென்றதாகவும், அங்குள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி விட்டு அருகே இருந்த நாணயம் என்பவரது தோப்பிற்கு சென்று மது அருந்தியதாகவும், தோப்பில் உள்ள கிணற்றில் மகிழனை வீசி கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்து சிறுவனின் உடலை மீட்டு; பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : 6 வயது சிறுவனை கொலை செய்த தந்தை கைது 

Share via